திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து அதிகரித்து 35 அடி உயரத்தை எட்டிவருவதால் ஒன்பது மணி அளவில் வினாடிக்கு ஆயிரம் கனஅடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட உள்ளது. பூண்டி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1290 கனஅடி வருகிறது. மொத்த கொள்ளளவு 3631 மில்லியன் கனஅடி. அதில் தற்போது 3121 மில்லியன் கனஅடி உள்ளது. மொத்த உயரம் 35 அடி. அதில் தற்போது 34.92 அடி நீர்மட்டம் உள்ளது.
பூண்டி அணையிலிருந்து லிங்க் கால்வாயில் வினாடிக்கு 500 கனஅடி செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறந்துவிடப்பட்டு வருகிறது. புழல் ஏரிக்கு 300 கனஅடி செல்கிறது. பேபி கால்வாயில் சென்னை குடிநீருக்கு நீரேற்றுநிலையம் மூலம் வினாடிக்கு 17 கனஅடி அனுப்பப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்புக் கருதி உபரிநீர் வினாடிக்கு ஆயிரம் கனஅடி மதகுவழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றைக் கடந்துசெல்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினரால் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர்.