திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த கனமழையால், மன்னார்குடி பகுதியில் மட்டும் தலா 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மன்னார்குடி, கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் 20 நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட தாளடி இளம் பயிர்கள் மற்றும் நேரடி விதைப்பு பணிகள் நீரில் மூழ்கின. தொடர்ந்து பெய்த கனமழையால் பயிர்களின் வேர்களை சூழ்ந்த மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால், வேர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருபோக சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் மிகுந்த மனவேதனையில் தவித்து வருகின்றனர்.