திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட விழல்கோட்டை ஊராட்சிப் பகுதியில் உள்ள கோரையாற்று இணைப்பு நடைபாலம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இப்பாலத்தை சீரமைக்கக் கோரி மக்கள் பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேவங்குடி, விழல்கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் எனப் பலரும் தினசரி இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். பாலத்தின் கீழ்ப்பகுதி மற்றும் தடுப்புச் சுவர்கள் சிதலமடைந்துள்ளதால், உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தான சூழலில் மக்கள் அச்சத்துடன் பாலத்தைக் கடந்து செல்கின்றனர்.