திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கன மழையால், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை அருகே மேலமருதூர், எழிலூர், பிச்சன்கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 20 நாட்கள் ஆன சம்பா தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வளவன் ஆறு, மறைக்காகோறையாறு மற்றும் வடிகால் வாய்க்கால்களில் வெங்காயத் தாமரை மண்டிக்கிடப்பதால் தண்ணீர் வடியாமல் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது டீசல் இன்ஜின்களைக் கொண்டு வயலில் இருந்து தண்ணீரை அகற்றி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக வாய்க்கால்களைத் தூர்வாரி தண்ணீரை வடிய வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.