திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பதினோராம் வகுப்பு கம்ப்யூட்டர் காமர்ஸ் பிரிவில் இன்று மதியம் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பள்ளியின் சத்துணவு ஆசிரியர் சமையலறையில் உள்ள இருந்த குக்கர் திறக்க முடியாததால் உதவிக்காக இரண்டு மாணவர்களை அழைத்துள்ளார்.
அப்போது மாணவர்கள் கிஷோர் மற்றும் பார்த்திபன் இருவரும் சென்று ஆசிரியருக்கு உதவியாக பருப்பு வேக வைக்கப்பட்ட குக்கரை திறந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக குக்கர் உள்ளிருந்த உணவு வெடித்து சிதறியது. இதில் மாணவர்கள் இருவரின் முகத்தில் நீராவி பட்டு துடிதுடித்தனர். இதனை கண்ட ஆசிரியர்கள் உடனடியாக மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாணவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.