கோவில்பட்டி அருகே கோவிலுக்கு வந்த பக்தரிடம் மயில் ஒன்று அன்புடன் உறவாடி உணவருந்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குருமலை கிராமம் உள்ளது. இந்த குருமலையின் அருகே மலைக்குன்றுகள் மற்றும் காப்புகாடு உள்ளது. இங்குள்ள காப்புகாட்டில் அதிக அளவில் மான் மற்றும் மயில்கள் உள்ளன. மலைக்குன்று மற்றும் அதன் அடிவாரத்தில் முருகன், அய்யனார் கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களுக்கு நேற்று புதுப்பச்சரிசியை சேர்ந்த செல்வம் முருகன் என்பவர் சென்று விட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு மலை அடிவாரத்தில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் மயில்கள் உலாவதை பார்த்தவர் தன் கையில் வைத்திருந்த நிலக்கடலையை அளித்தார். அப்போது ஒரு மயில் மட்டும் அவரைத் தேடி வந்து அவரின் கையில் இருந்த நிலக்கடலையை பெற்று உணவருந்தியது. அது மட்டுமல்லாது செல்வமுருகனுடன் அன்புடன் இந்த மயில் பழகியது அசத்தியது. இந்தக் காட்சிகளை அப்பகுதியில் இருந்த ஒருவர் தனது செல்போன் மூலமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.