தூத்துக்குடியில் ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் மருத்துவமனை பெண் செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தார். முத்தையாபுரம் தவசி பெருமாள் சாலை பகுதியைச் சேர்ந்த டோமினிக் ஆண்டோ மனைவி மரிய அன்பரசி (37). இவர், முத்தையாபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று திருச்செந்தூர் சாலை வழியாக தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த லாரி, அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இவ்விபத்தில் பலத்த காயமடைந்த மரிய அன்பரசியை, அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷோபா ஜென்ஸி வழக்குப் பதிந்து, லாரி டிரைவர் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலம் மகன் உதயகுமார் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.