டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் தூத்துக்குடியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் 81 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாகத்தில் சுமார் ரூ. 1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த ஊழலை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இதனைக் கண்டித்து தூத்துக்குடியில் வி.வி.டி. சிக்னல் அருகில் பாஜக சார்பில் தெற்கு மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஓபிசி அணி மாநில துணைத் தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜா, சத்தியசீலன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர்கள் செல்வராஜ், சிவராமன், வழக்கறிஞர் எஸ். பி. வாரியார், தங்கம், மாவட்ட செயலாளர் வீரமணி சங்கர், அர்ஜுன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 11 பெண்கள் உட்பட 81 பேரை தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் கைது செய்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.