தூத்துக்குடி: நாய்கள் ஜிபிஎஸ் கேமரா மூலம் கண்காணிப்பு

67பார்த்தது
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் திரியும் நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடைக்குப் பின்னர் பராமரிக்கப்படுவது ஜிபிஎஸ் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மேயர் பேசுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து அதற்குக் கருத்தடை மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படுமாயின் செய்வதற்கெனப் பிரத்தியேகமான இடம் மாநகராட்சி உரக்கிடங்கில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பிடிக்கப்படும் நாய்களானது ஜிபிஎஸ் கேமரா மூலம் பிடிக்கும் இடத்தின் புகைப்படம் மற்றும் நேரம் ஆகியவை கண்காணிக்கப்பட்டு உரிய சிகிச்சைக்குப் பின் பிடிக்கப்பட்ட இடத்தில் விடுவதை உறுதிப்படுத்தும் விதமாகவும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மேலும் பொதுமக்கள் மாநகராட்சியின் 18002030401 என்ற இந்தக் கட்டணமில்லா எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்" என்றார். இதில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி