திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தின் பொது மேலாளர் துப்பாக்கியால் அலுவலகத்திற்குள் சுட்டு தற்கொலை செய்துள்ளார். பெல் நிறுவனத்தின் எஸ்எஸ்டிபி பிரிவில் பொது மேலாளராக வேலை பார்த்து வரும் சண்முகம் (50) வழக்கம்போல் நேற்று காலை 8.30 மணிக்கு பணிக்கு சென்றுள்ளார். அப்படி சென்றவர் மாலை 4.30 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பவில்லை. அவரை அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், பெல் நிறுவன அலுவலகத்திற்குள் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் கையில் துப்பாக்கியுடன் சுடப்பட்ட நிலையில் சோபாவில் இறந்து கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக பெல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெல் போலீசார் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சண்முகம் இறப்பிற்கான காரணம் என்ன? சண்முகம் உண்மையில் தற்கொலை செய்து கொண்டாரா? அலுவலக அறைக்குள் எப்படி துப்பாக்கி வந்தது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெல் நிறுவனத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.