திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள புலிவலம் முத்துராஜா தெருவை சேர்ந்தவர் பிரவீன் ராஜ். இவரது மனைவி ராதிகா, இவர் கடந்த 19ஆம் தேதி திருச்சி புத்தூர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் மகப்பேறு பரிசோதனைக்காக சேர்ந்தார். இந்த நிலையில் இவருக்கு 20ஆம் தேதி மாலை பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. இதனை அடுத்து குழந்தைக்கு தாய்ப்பால் இல்லாததால் பவுடர் பால் கொடுத்ததாக கூறப்படுகிறது.
குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்து மே 21ஆம் தேதி காலை உயிரிழந்தது. இந்த நிலையில் குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இறந்த குழந்தை திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் முன்னிலையில் குழந்தையின் உடலை இன்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்யப்படுகிறது.