கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், கல்லை பகுதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (26). தனியார் நிறுவன ஊழியரான இவர் திருச்சி சுந்தர் நகர் பகுதியில் உள்ள கடையில் கடந்த 2024ல் ரூ. 360-க்கு பேக்கிங் செய்யப்பட்ட 200 கிராம் அளவிலான வால்நட்ஸ் உணவுப் பொருளை வாங்கி சாப்பிட்டார். இதனால் வெள்ளைச்சாமிக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்த்துள்ளார். காலாவதியான வால்நட்ஸ் உணவுப் பொருளை சாப்பிட்ட வெள்ளைச்சாமிக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து வால்நட்ஸ் பாக்கெட்டை பார்த்தபோது, அதில் உற்பத்தி தேதி, காலாவதி தேதி, விலை என உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை. இதற்கு நிவாரணம் கோரி வெள்ளைச்சாமி திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2025-ம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். மனுவை திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சேகர், செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு, நியாயமற்ற வர்த்தகத்துக்காக மனுதாரருக்கு உணவுப் பொருள் வாங்கிய தொகை ரூ. 360-ம், உடல் உபாதை மற்றும் மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக சேலம் மற்றும் திருச்சியைச் சேர்ந்த அந்த நிறுவனம் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ ரூ. 10 ஆயிரமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 5 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.