நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுக்கா பரமத்தி வேலூர் அடுத்த செங்கப்பள்ளி சேர்ந்த பழனிசாமி மனைவி விஜயா. இவர் நேற்று காட்டுப்புத்தூர் செல்வதற்காக பரமத்தி வேலூரில் இருந்து அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்து காட்டுப்புத்தூரில் வந்து இறங்கும்போது ரூபாய் 4000 பணம் மற்றும் தனது ஆதார் கார்டு வைத்திருந்த பணப்பையை பேருந்தில் தவறவிட்டுள்ளார்.
இதனால் பதறிப்போன விஜயா உடனடியாக காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் வந்து தகவல் தெரிவித்துள்ளார். அப்போது பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் முருகன் உடனடியாக தொட்டியம் காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு அரசு பேருந்தில் விஜயா அமர்ந்திருந்த இருக்கை பற்றி அடையாளத்தை தெரிவித்தார்.
பின்னர் தொட்டியம் போலீசார் காவல் நிலையம் முன்பு அரசு பேருந்தை நிறுத்தி மூதாட்டி விஜயா தவறவிட்ட பணப்பையை கண்டுபிடித்து காட்டுப்புத்தூர் தணிப்பிரிவு காவலர் ராஜா மூலம் காவல் நிலையம் கொண்டு வந்து விஜயாவிடம் ஒப்படைத்தனர். இதை அடுத்து மூதாட்டி விஜயா காணாமல் போன தனது பணப்பையை உடனே மீட்டுக் கொடுத்த உதவி காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.