திருச்சி ரயில்வே காலனி கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது பாதுஷா இவரது மனைவி கலைச்செல்வி. இந்த தம்பதியரின் மகன் ராகுல் (வயது 14) இவர் திருச்சி பொன்மலைப்பட்டி இன்பேண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த மார்ச் 28ம் தேதி, விடுதியில் தங்கி இருந்த ராகுல் மீது, இருதய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம், மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ராபின்சன் ஆகியோர் அவர் மீது திருட்டுப் பழி சுமத்தி விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. மேலும் அங்குள்ள ரூமில் அடைத்து வைத்து கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாக கூறப்பட்டது.
இதனால் பயந்து போன அந்த சிறுவன் தனது தாயாரிடம் தன்னை விடுதியில் இருந்து காப்பாற்றிச் செல்லுமாறு கூறியுள்ளான். மேலும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்பட்டது. இதுகுறித்து கலைச்செல்வி பொன்மலை போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ராபின்சன் மீது பொன்மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.