திருச்சி தில்லை நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக உறையூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் உறையூர் இன்ஸ்பெக்டர் ராமராஜன் மற்றும் சிறப்பு பிரிவு காவல் படையினர் தில்லைநகர் 80 அடி ரோடு காந்திபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காந்திபுரம் நியூ காலனியை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன்கள் அன்பரசன் (வயது 40) மற்றும் தென்னரசன் (வயது 32) ஆகியோர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததும், நீண்ட காலமாக சட்ட விரோத லாட்டரி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து உறையூர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ. 7 லட்சத்து 25 ஆயிரம் பணம் மற்றும் 3 செல்போன்கள், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.