திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூடிய தட்டுகளில் உணவு வழங்கும் திட்டத்துக்கு நோயாளிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனை நிர்வாகமானது, சரிவிகித உணவு வழங்கி வருகிறது. முன்னர், நோயாளிகள் தட்டுகளை எடுத்து வந்து நீட்ட, மருத்துவமனை ஊழியர்கள் உணவை வழங்குவர். உதவியாளர் இல்லையெனில் உணவு வாங்க முடியாத நிலையில், நோயாளிகள் இருந்து வந்தனர். சிலர் வரிசையில் தட்டுடன் நின்று உணவு வாங்க கூச்சப்பட்டு, வாங்காமல் இருந்தனர்.
இந்நிலையில், சில நாள்களாக சிகிச்சை பெறும் ஒவ்வொரு நோயாளிக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான முறையில் மூடியுடன் கூடிய தட்டுகளில் சாதம், சாம்பார், மோர், கீரை, மூட்டை, வாழைப்பழம் ஆகியவற்றை வைத்து சரிவிகித உணவு வழங்கப்படுகிறது. இதை மருத்துவமனை ஊழியர்கள், நோயாளியின் படுக்கைக்குச் சென்று வழங்கி வருகின்றனர். இத்திட்டத்துக்கு நோயாளிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.