திருச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 337 சதுர அடியில் 7 தளங்களுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அமைய உள்ளது.
இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, மகேஷ்பொய்யாமொழி மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், நகராட்சி ஆணையர் சரவணன், மேயர் அன்பழகன், மற்றும் வாசகர் வட்ட வாசகர்கள் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கட்டப்படவுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் அறிவியல் மையம், குழந்தைகளுக்கான திரையரங்கம், குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் பாடப்புத்தகங்கள் பகுதி, ஆராய்ச்சி மையம், பயிலரங்கம் பல்நோக்குக் கூடம் மற்றும் ரோபோட்டிக்ஸ் மற்றும் விளையாட்டுப் பகுதி, டிஜிட்டல் நூலகம், ஆங்கில நூலகம் உள்ளிட்டவை அமைய உள்ளது. மேலும், அறிவுசார் மையத்தில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையமும் அமைய உள்ளது. இரண்டு முதல் ஏழு தளங்களுக்குச் செல்லும் வகையில் மின்தூக்கி சேவைகளும் அமைக்கப்பட உள்ளன.