முதல்வர் ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை யொட்டி திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட, திருச்சி மாநகராட்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் அருகே திமுக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு சிறப்புரை ஆற்றவும், நலத்திட்ட உதவிகள் வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. திருச்சி மாநகரில் லேசான மழை பெய்துவந்த நிலையில், ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பெருமளவு ஆர்வம் காட்டாத நிலையில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகனுடன் அமைச்சர் கே.என். நேரு வருகை தந்தார்.
அப்போது பொதுக்கூட்டத்தில் போடப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தும் காலியாக இருந்ததுடன், கூட்டம் இல்லாததால் அமைச்சர் கே.என். நேரு ஆத்திரமடைந்தார். திமுகவினரும் வராமல், காலி நாற்காலிகள் மட்டுமே இருந்ததால், ஏற்பாட்டாளர்களை தனது வழக்கமான பாணியில் விசைபாடிவிட்டு தனக்கு குடைபிடித்துக் கொண்டிருந்த பாதுகாவலரையும் கோபத்தில் திட்டிவிட்டு பின்னர் காரில் ஏறி புறப்பட்டுச் சென்ற நிகழ்வு அரங்கேறியது. வழக்கமாக திமுக பொதுக்கூட்டம் என்றால் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவோர் என கூட்டம் அதிகரித்து காணப்படும். தற்போது ஆட்சி மீதான மற்றும் அமைச்சர்கள் மீதான அதிருப்தி காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.