தாராபுரம் கவுண்டச்சிபுதூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 30). இவர் கடந்த 26-ந் தேதி இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் கலைச்செல்வியிடம் முகவரி கேட்பது போல் நடித்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தாராபுரம் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு இருந்த சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் அலங்கியம் பகுதியை சேர்ந்த சிறுவன் என்பதும், கலைச்செல்வியிடம் செல்போன் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.