தாராபுரம் பஸ் நிலையம் பகுதியில் அதிக அளவில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது தாறுமாறாக வருகின்றன. குறிப்பாக பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே, வெளியே வரும் இடத்தில் அதிக அளவில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். பஸ்கள் பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வரும்போது திரும்புவதற்கு இடையூறாக இருந்தது.
இதனால் தாராபுரம் போக்குவரத்து கிளை சார்பில் போக்குவரத்து காவல்துறையினருக்கு கோரிக்கை மனு அனுப்பினர். அந்த மனுவின் அடிப்படையில் தாராபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜினி தலைமையில் போக்குவரத்து போலீசார் உடனடியாக துரிதநடவடிக்கை எடுத்தனர். அதன்படி பஸ் நிலையத்திலிருந்து பஸ் உள்ளே மற்றும் வெளியே வரும் இடத்தில் நோ பார்க்கிங் என டிவைடர் வைத்து இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவாக இடம் இல்லை எனவும் அருகிலுள்ள காலியாக உள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்தனர்.
மேலும் பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்கள் செல்லக்கூடாது என தடை விதித்து இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். போக்குவரத்து போலீசாரின் இந்த முயற்சிக்கு பஸ் நிலையத்தில் உள்ள பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.