திருப்பூரில், பனியன் நிறுவன தொழிலாளியான விஸ்வராஜ் (23) நேற்று பூலுவப்பட்டிக்கு டவுன் பஸ்ஸில் சென்றார். பஸ் பூலுவப்பட்டி அருகே சென்றபோது, அவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் காணாமல் போனது. பஸ் நின்றதும் அவசரமாக இறங்கிச் சென்ற முதியவர் மீது சந்தேகம் அடைந்த விஸ்வராஜ் அவரைப் பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் செல்போன் இருந்தது தெரியவந்தது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடியதாகக் கூறப்படும் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த மனோகரன் (65) என்பவரை அனுப்பர்பாளையம் போலீசாரிடம் விஸ்வராஜ் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், மனோகரன் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனுப்பர்பாளையம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.