திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: - எனது மகள் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ளதால் பீகாரில் நடக்கும் தேசிய வாள்சண்டை போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறாள். பீகாருக்கு 4-ந்தேதி (இன்று) புறப்பட்டால் தான் போட்டியில் கலந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்பதால் இன்று (செவ்வாய்க்கிழமை) புறப்பட இருக்கிறாள்.
இந்த நிலையில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒருவர் அவரது நண்பரை வைத்து திருப்பூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் மகள் மீது தவறான புகார் கொடுத்துள்ளார். போலீஸ் நிலையத்தில் மாணவி என்றும் பாராமல் காலை முதல் மாலை வரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர வைத்துவிட்டனர். இதனால் எனது மகள் அதிக மனஉளைச்சலுடன் இருக்கிறாள். எனவே இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுத்து எனக்கும், எனது மகளுக்கும் பாதுகாப்புத்தர வேண்டும்.