திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.
இதில் சத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வூதியம் ரூ. 7 ஆயிரத்து 850-ஐ குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியருக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியருக்கு வழங்க வேண்டிய ஜி.பி.எஃப். மற்றும் ஒட்டுமொத்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பணியில் உள்ள தகுதியான உதவியாளர்களுக்கு சமையலராக பதவி உயர்வு வழங்க வேண்டும். 10-ம் வகுப்பு முடித்த சமையலர், உதவியாளர்களுக்கு அமைப்பாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பொங்கலூர் ஓய்வூதியர் சங்க செயலாளர் பாக்கியம், பல்லடம் ஓய்வூதியர் சங்க செயலாளர் செல்வராணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.