திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடிபட்டி அருகிலுள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு திருமண நிகழ்ச்சிக்காக காரில் சென்ற கார்த்திகா என்பவர் காரின் பின்பக்க கண்ணாடி ஏற்றப்பாடாமல் இருந்ததை கவனிக்காமல், அவரது நகைகளில் சிலவற்றை காரிலேயே வைத்துவிட்டு காரை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
அதன்பிறகு சுமார் 11.30 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது அவரது காரிலிருந்த நகைகளை யாரோ திருடிச் சென்றிருந்ததை அறிந்து உடுமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் உடனடியாக இத்திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சம்பவத்தில் ஈடுபட்ட ஆறுமுகம் (41), த/பெ சுப்பிரமணி, தாராபுரம் என்பவரை உடுமலை - தாராபுரம் ரோடு பைபாஸ் சந்திப்பு அருகே நேற்று மாலை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து திருடப்பட்ட சுமார் 10 1/4 பவுன் தங்க நகைகளை கைப்பற்றி, விசாரணைக்குப் பிறகு மேற்படி நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்காக உடுமலை கிளைச்சிறையில் அடைத்தனர்.