திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே அரிசி ஆலை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ஆரணியை அடுத்த இ.பி. நகர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ் (36). இவர், இந்தப் பகுதியில் உள்ள அரிசி ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு மனைவி பாஞ்சாலி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், தங்கராஜ் குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு வியாழக்கிழமை கிரிவலம் சென்றார். பின்னர், வெள்ளிக்கிழமை காலை வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 30 பவுன் நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி, ஆய்வாளர் விநாயகமூர்த்தி, உதவி ஆய்வாளர் அருண்குமார் மற்றும் போலீசார் நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, திருவண்ணாமலையிலிருந்து விரல் ரேகை நிபுணர் சுரேஷ்குமார், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். மேலும், ஆரணி கிராமிய போலீசார் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.