ஆரணி: காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு; வீட்டை அடித்து நொறுக்கிய உறவினர்கள்

73பார்த்தது
ஆரணி: காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு;  வீட்டை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள அனந்தபுரம் ஊராட்சி மேல்வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த சதானந்தன் மகன் தமிழரசன். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், தமிழரசனும் ஜவ்வாதுமலை ஒன்றியம் கானமலை மலைக்கிராமப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனிடையே, பெற்றோரின் அனுமதியில்லாமல் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த வெள்ளிக்கிழமை கோயிலில் திருமணம் செய்துகொண்டு, நண்பர் வீட்டில் தஞ்சமடைந்து விட்டனர். 

மாற்றுச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, அனந்தபுரம் அருகே மேல்வசந்தபுரம் கிராமத்தில் உள்ள தமிழரசனின் அண்ணன் வீட்டை அடித்து நொறுக்கியதில் வீட்டில் இருந்த விலை உயர்ந்த மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தடுக்க வந்த உறவினர்களைத் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழரசனின் அண்ணி டி. சுவேதா கண்ணமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பாக கானமலை கிராமத்தைச் சேர்ந்த விஜயன் மகன் ராகுல் (24), மூர்த்தி மகன் சத்தியராஜ் (28) உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி