திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டாக்டர் எம்ஜிஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் ஆதனூர் கிராமத்தில் தொடங்கியது. வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த முகாம் தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் கே. இளங்கோ தலைமை வகித்தார்.
செயலர் ஏ. சி. ரவி நாட்டு நலப்பணித் திட்ட முகாமை தொடங்கிவைத்தார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ். மாருதி சீனிவாசன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் புவனேஸ்வரி ஆனந்தன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ். தண்டாயுதபாணி, கிராம நிர்வாக அலுவலர் எஸ். கௌதமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆதனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர் சரவணன் வாழ்த்துரை வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் எம். தனசேகரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சேத்துப்பட்டு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் நா. முத்துவேலன் கலந்து கொண்டு பேசினார்.
முகாமில் கிராமத்தில் தூய்மைப் பணி மேற்கொள்வது, சாலை சீரமைத்தல், உலக வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு மற்றும் பேரிடர் கருத்தரங்கம் பற்றிய விழிப்புணர்வு, மின் சிக்கனம், மின் வயரிங் பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் பயிற்சியும் நடைபெற்றது.