ஆரணியில் இருந்து சென்னைக்கு புறவழிச்சாலை வழியாக நேரடியாக பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று, அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளரிடம் ஆரணி வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
ஆரணி வட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம், ஆரணி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கம், ஆரணி வட்ட நெல் அரிசி வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பணிமனை கிளை மேலாளர் எஸ். ராமுவைச் சந்தித்து அளித்த மனு விவரம்: ஆரணியிலிருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்துகள் ராணிப்பேட்டை, வாலாஜா, பாலுச்செட்டிசத்திரம், பனப்பாக்கம் மற்றும் சுங்குவாச்சத்திரம் உள்ளே சென்று வருவதால், பயண நேரம் ஒரு மணி கூடுதலாகிறது.
இதனால் வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த முறையை மாற்றி புறவழிச்சாலை வழியாக நேரடியாக சென்னைக்கு பேருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். இதில் சங்க நிர்வாகிகள் பக்ருதீன்அலிஅகமது, எம். ஜெயப்பிரகாஷ், எஸ். சந்திரசேகர் (எ) சந்துரு, டி. எச். குருராஜாராவ், வி. கே. சர்மா, பி. நடராஜன், கே. செல்வம், எஸ். சுரேஷ்பாபு, பி. தீனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.