திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது 3 இளைஞர்கள் சென்ற பைக் மோதி விபத்துக்குள்ளானதில் வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த லோகேஷ் (24) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், படுகாயம் அடைந்த வெம்போடை கிராமத்தை சேர்ந்த இன்பநாதன், தமிழ்செல்வன் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்பநாதன் என்பவர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும் விபத்துக்குள்ளான மூவரும் வேட்டுக்கத்தி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த பிரம்மதேசம் போலீசார் லோகேஷின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் யாரேனும் கொலை செய்யும் நோக்கத்தோடு சென்றார்களா? அல்லது இவர்கள் ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டனரா என பிரம்மதேசம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.