திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் தீபத் திருவிழா தினமான டிசம்பர் 13 ஆம் தேதி பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலை மீது ஏற தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் பக்தர்களுக்கு அனுமதி மறுத்த நிலையில் குறைந்த எண்ணிக்கையில் தீபம் ஏற்றும் முறைதாரர்கள் மலை மீது ஏறி தீபம் ஏற்றவும் அனுமதி அளித்தனர்.
இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடா எஸ்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த அன்னபூர்ணா இரவு 07:30 மணிக்கு தடையையும் மீறி தீபமலை மீது ஏறி உள்ளார். அவ்வாறு மலை மீது ஏறிய அன்னபூர்ணாவுக்கு திரும்ப வர வழி தெரியாததால் மலைக்கு பின்புறமாக சென்ற அவருக்கு கீழே இறங்க வழி தெரியாமல் கடந்த இரண்டு தினங்களாக மலையிலேயே இரவு, பகலாக தவித்தும் வந்துள்ளார்.
இந்த நிலையில் மலைமீது பெண் ஒருவர் தவித்து வருவதாக நகர காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மலையின் மீதுள்ள இரண்டு பள்ளத்தாக்குகளை கடந்து சென்ற வனக்காப்பாளர் ராஜேஷ் புதருக்குள் இருந்த விஜயவாடாவைச் சேர்ந்த அன்னபூர்ணாவை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து இரண்டு தினங்களாக உணவில்லாமல் தவித்து வந்த அவரால் கீழே இறங்க முடியாத சூழலில் முதுகில் வனக்காப்பாளர் ராஜேஷ் மலையிலிருந்து பத்திரமாக மீட்டு கீழே 5 மணி நேரத்திற்கு பிறகு கொண்டு வந்தார்.