வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட பாதிரி எல்லையில் அமைந்துள்ள B ஏரி கரையில் பல வருடங்களாக கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் மாட்டு இறைச்சி விற்பனை செய்து விட்டு மீதமுள்ள கழிவுகளை கொண்டு வந்து இறைச்சி வியாபாரிகள் கொட்டி வருவதாக பல்வேறு புகார்கள் வருகின்றன. கடந்த மூன்று நாட்களாக மாட்டு இறைச்சி கழிவுகளும் கோழி இறைச்சி கழிவுகளும் ஏராளமான மூட்டைகளில் ஏரி கரையில் கொட்டப்பட்டதால் மிகவும் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் நோய் தொற்று அபாயமும் ஏற்படுகிறது. இந்தக் கழிவுகளை உண்பதற்காக வருகின்ற நாய்கள் சண்டையிட்டு கொள்வதால் அந்த பகுதி வழியாக செல்லும் பைக்குகள் மற்றும் பல்வேறு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது. வந்தவாசி நகராட்சி சார்பில் ஏரி கரையில் கொட்டப்பட்டுள்ள மாட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சி கழிவுகளை நகரமன்ற பணியாளர்கள் ஜே.சி.பி. இயந்திரம் வைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
இதுகுறித்து வந்தவாசி நகரமன்ற தலைவர் ஜலாலிடம் கேட்டதற்கு, ஏரிக்கரையில் மாடு மற்றும் கோழி கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நகரில் இயங்கும் அனைத்து மாடு மற்றும் கோழி இறைச்சி கடைகளுக்கு இன்று நோட்டீஸ் வழங்கப்படுவதுடன் வந்தவாசி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். மீறி கழிவுகளை ஏரிக்கரையில் கொட்டுபவர்களுக்கு உரிய முறையில் தண்டனை அபராதமாக அதிகரித்து விதிக்கப்படும் என கூறினார்.