திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா உமராபாத் பனங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன் மகன் இன்பகுமார் (வயது 26). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடாம்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி வேலைக்காக இன்பகுமார் ஆட்டோவில் செல்லும்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து 20.02.2020 ஆம் தேதி சிறுமியை இன்பகுமார் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இன்பகுமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது இன்பகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.3,000 அபராதமும், அபராதத்தைக் கட்ட தவறினால், கூடுதலாக ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கி மாவட்ட அமர்வு நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பு அளித்தார்.