காட்பாடி தாலுகா வஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்சுடர் (வயது 49). இவர் கடந்த 11-ந் தேதி இரவு 9. 30 மணி அளவில் இரும்பு கம்பி மீது சாய்ந்தபோது, முதுகில் காயம் ஏற்பட்டதாகக்கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். 12-ந் தேதி டாக்டர்கள் அவருக்கு அறுவைசிகிச்சை செய்தனர்.
அப்போது அவரின் உடலில் துப்பாக்கி குண்டு ஒன்று பாய்ந்திருந்தது. அதை டாக்டர்கள் அற்றினர். பின்னர் இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் விருதம்பட்டு காவல் நிலையதிற்கு தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அருள்சுடர் மற்றும் அவரது நண்பர் ஜான்சன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அருள்சுடர் காட்பாடி காந்திநகரில் 11-ந் தேதி இரவு அருள்சுடர் மற்றும் ஜான்சன் ஆகிய இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது அருள்சுடரின் உரிமம் இல்லாத கைத்துப்பாக்கியை ஜான்சன் மதுபோதையில் கவனக்குறைவாக கையாண்டதில், எதிர்பாராதவிதமாக அருள்சுடரின் முதுகில் துப்பாக்கி தோட்டா பாய்ந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அருள்சுடர், ஜான்சன் மீது விருதம்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து ஜான்சனை கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.