விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த ஒழுந்தியாம்பட்டைச் சேர்ந்தவர் ராஜி. இவரை, மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் கடன் தருவதாக கூறி 8.20 லட்சம் ரூபாயை ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலி கால் செண்டர் மையம் அமைத்து, அதன் மூலம் ஆன்லைன் கடன் தருவதாக பலரை தொடர்பு கொண்டு, மோசடியில் ஈடுபட்ட சென்னை, நெசப்பாக்கம், பாரதி நகரைச் சேர்ந்தவர் வாசு மகன் கோபிகிருஷ்ணன், 36; இவரது தலைமையில், தினேஷ், நடராஜன் உட்பட 4 பேர் சைபர் க்ரைம் குற்றத்தில் ஈடுபட்டதாக கடந்த பிப்ரவரி 9ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இதில், தொடர் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்த கோபிகிருஷ்ணன் மீது, குண்டர் சட்டத்தில் கைது செய்ய விழுப்புரம் எஸ்.பி., சரவணன் பரிந்துரை செய்ததன் பேரில், கோபிகிருஷ்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான், உத்தரவிட்டார். இதனையடுத்து, கோபிகிருஷ்ணனை, விழுப்புரம் சைபர் க்ரைம் போலீசார், குண்டர் சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.