மேல்மலையனுார் பி.டி.ஓ. அலுவலகத்தில், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ. ஜெயசங்கர் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., 44 பயனாளிகளுக்கு, தலா 3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளையும், 134 துாய்மை பணியாளர்களுக்கு, 26 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார். மாவட்ட கவுன்சிலர் செல்விராமசரவணன், பி.டி.ஓ. சீதாலட்சுமி, துறை சார்ந்த அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.