செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், 2013 ஏப்ரல் 23ம் தேதி, வன்னியர் சங்கம் சார்பில் இளைஞர் பெருவிழா மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தினர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்த போது, வழியில் மரக்காணத்தை சேர்ந்த சிலருக்கும், மாநாட்டிற்கு சென்ற பா.ம.க. வினருக்கும் தகராறு ஏற்பட்டு, கலவரமாக மாறியது. அதில், அரசு மற்றும் தனியார் பஸ்கள், வாகனங்கள் நொறுக்கப்பட்டன.
சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. மரக்காணம் போலீசார், பா.ம.க. கடலூர் மாவட்ட முன்னாள் செயலர்கள் கலையரசன், சசிக்குமார், நிர்வாகிகள் உட்பட 20 பேரை கைது செய்தனர். வழக்கு விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, அரசு தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால், 20 பேரையும் விடுதலை செய்து நேற்று தீர்ப்பளித்தார்.