வங்கக்கடலில் உருவான ‘டிட்வா' புயல் தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக குறைந்துள்ளது. இருப்பினும், விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக திண்டிவனம், மரக்காணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. காலை முதல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் - பாண்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தண்ணீரில் வாகனங்கள் பழுதாகி நிற்பதால் மேலும் சிரமம் ஏற்படுகிறது.