விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில், பா.ம.க., சார்பில், 10.5 சதவீத இடஒதுக்கீடை வழங்காத தி.மு.க., அரசை கண்டித்து நேற்று (டிசம்பர் 24) ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான கட்சியினர் திரண்டிருந்தனர். பகல் 11.50 மணிக்கு துவங்கி 1.00 மணி வரை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த பா.ம.க., வினர் நகராட்சி திடலில் இடவசதியின்றி, திருச்சி சாலையில் நின்றதால், அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார், எல்லீஸ் சத்திரம் சாலை வழியாக, வாகனங்களை திருப்பிவிட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு வந்த சிலர், வழியில் கலெக்டர் அலுவலகம் எதிரே திருச்சி சாலையில் திரண்டு சாலையை ஆக்கிரமித்தபடி கோஷமிட்டு சென்றனர். அப்போது, எதிரே சாலையோரம் வைத்திருந்த தி.மு.க., பேனரில், துணை முதல்வர் உதயநிதியின் படம் கிழிக்கப்பட்டது. பா.ம.க., வினர் தான் கிழித்ததாக கூறப்பட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், பா.ம.க., வினர் அதனை மறுத்தனர். உடனே அந்த பேனரை போலீசார் கழற்றி அப்புறப்படுத்தினர்.