விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த வி. அகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவரை நேற்று முன்தினம் மாணவி கிண்டல் செய்துள்ளார். ஆத்திரமடைந்த மாணவர், மாணவியை பள்ளி இடைவேளையின் போது தாக்கியுள்ளார். இது பற்றி அய்யூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் செங்கேணி, 50; என்பவரிடம் மாணவி புகார் தெரிவித்தார். ஆசிரியர் செங்கேணி, அந்த மாணவரைக் கண்டித்து பிரம்பால் அடித்துள்ளார். இதனால், மாணவர், பல மணி நேரமாக வகுப்பறையில் அழுததால் வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார்.
மாணவரை மீட்ட ஆசிரியர்கள், அருகே உள்ள ஏ. கே. குச்சிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து, பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு வந்த பெற்றோரிடம், மாணவர் தலைவலி அதிகமாக உள்ளதாகக் கூறியதால், டாக்டர்கள் மேல்சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சை அளித்தும் தலைவலி சரியாகாததால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு தலைமையாசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.