காணை ஒன்றியம், சூரப்பட்டு ஊராட்சியில் ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ், மறுசீரமைக்கப்பட்ட குடியிருப்புகளை வியாழக்கிழமை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சி. பழனி, சீரமைப்புப்பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து கெடார் ஊராட்சியில் 15-ஆவது நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் ரூ. 1.26 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்ட ஆட்சியர், பொருள்களின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் அதே பகுதியில் பொது நூலகங்களின் சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகக் கட்டடப் பணி, முதல்வரின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சத்தில் தார்ச்சாலை மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகள் ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார். பள்ளியந்தூர் ஊராட்சியில் ரூ. 19.33 கோடியில் கட்டப்பட்டு வரும் இரு பாலருக்கான மாதிரிப் பள்ளி, விடுதி போன்றவற்றின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்ட ஆட்சியர் சி. பழனி, கட்டமைப்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். அரசு வழங்கிய வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களை அறிவுறுத்தினார்.