விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நீதிமன்றக் காவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட எஸ்.பி. சரவணன் தலைமை வகித்து, நீதிமன்றக் காவலர்கள் அழைப்பாணைகளை சரிவர செய்தல், பிடி ஆணையை நிறைவேற்றுதல், சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து, நீதிமன்ற வழக்கு விவரங்களை தங்களது கைப்பேசியில் பதிவு செய்து வைத்திருந்த செஞ்சி முதல்நிலைக் காவலர் ஆதிமூலம், அரகண்டநல்லூர் தலைமைக் காவலர் பரந்தாமன், காவலர் செல்வகுமார் ஆகியோருக்கு எஸ்.பி. சரவணன் பரிசளித்தார். இதேபோல, விழுப்புரம் ரயில் நிலையத்தில் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை கைது செய்த நகரக் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் பிரகாஷ்குமார், மணியாம்பட்டு ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படைக் காவல் உதவி ஆய்வாளர் சத்யானந்தன், தலைமைக் காவலர் இஸ்மாயில், முதல்நிலைக் காவலர்கள் ரகுபதி, பிரபாகரன், பழனி, ஆரீப் பாஷா ஆகியோருக்கு எஸ்.பி. சரவணன், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதில், ஏடிஎஸ்பி திருமால் மற்றும் அனைத்து காவல் நிலைய நீதிமன்றக் காவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.