விழுப்புரம் மாவட்டம் பனையபுரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், கொள்கை பரப்புச் செயலாளர் சபாபதி மோகன், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சை 'நசுங்கிய டப்பாவில் போட்ட செல்லாத காசின் சத்தம்' என உருவகப்படுத்திய அவர், விஜய்யை 'ஜஸ்ட் இக்னோர்' செய்ய வேண்டும் என்றும், கட்சி நடத்துவது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் பயிற்சி பெற வேண்டும் என்றும் கூறினார். மேலும், தமிழக அரசின் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வரும் மே மாதம் முதல் பெண்களுக்கு வழங்கப்படும் ₹1,000 உரிமைத்தொகை ₹2,000 ஆக உயர்த்தப்படும் என்றும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். விக்கிரவாண்டி தொகுதியில் தினசரி 82,000 பெண்கள் கட்டணமில்லா பேருந்து வசதியால் பயனடைவதாகவும், 20 லட்சம் குழந்தைகளின் பெற்றோர்கள் இத்திட்டத்தால் பயனடைவதாகவும் தெரிவித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் முயற்சியால் 42 லட்சம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, 13 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதையும், இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 தமிழகத்தில் உள்ளதையும் அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.