கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் அல்லிமுத்து மகன் அஸ்வத்தாமன், 38, பா.ஜ., மாநில செயலர். இவர், தனது மனைவி துர்கா, 34, மகன்கள் ஆகமன், 10, அச்சுதன், 7, ஆகியோருடன், 'ஸ்கார்பியோ' காரில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி நேற்று சென்றார். காரை, சங்கரபுரத்தை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன், 32, என்பவர் ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை 2.00 மணிக்கு விழுப்புரம், ஜானகிபுரம் மேம்பாலம் அருகே சென்றபோது, முன்னால் சென்ற தனியார் சுற்றுலா பஸ்சை இயக்கிய டிரைவர், திடீரென நிறுத்தினார்.
இதனால், பின்னால் வந்த பா.ஜ., பிரமுகரின் கார், பஸ் மீது மோதியது. இதில், அஸ்வத்தாமன், துர்கா, ஆகமன் ஆகியோர் காயமின்றி தப்பினர். லேசான காயமடைந்த சிறுவன் அச்சுதனுக்கு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய காரை, ரெக்கவரி வாகனம் மூலம் விழுப்புரத்திற்கு இழுத்துச் சென்றனர். காலை 4:00 மணிக்கு, புதிய பஸ் நிலையம் அருகே வந்தபோது, காரின் முன்பகுதியில் திடீரென கரும்புகை அதிகமாக வெளியேறியதால், சாலையில் நிறுத்தப்பட்டது. விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்து குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.