விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அமைச்சர் கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 2,15,97,540 செலவில், சிவகாசி மாநகராட்சி உட்பட மொத்தம் 2,639 தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி உணவு வழங்கப்படும். முதலமைச்சர் உத்தரவின்படி, அவர்கள் பணிக்குச் செல்லும் சரியான நேரத்தில் உணவு வழங்கப்பட வேண்டும். நகராட்சி ஆணையாளர் இத்திட்டம் சரியாக இயங்குகிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் அங்கேயே உணவு வாங்கிச் சாப்பிட்டுவிட்டு பணிக்குச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவ்வப்போது இத்திட்டத்தை ஆய்வு செய்து, முதலமைச்சர் தொடங்கிய இந்தத் திட்டத்தின் தரமான உணவை உறுதி செய்வார்கள். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டம் வழங்குவதற்காக ஒவ்வொருவருக்கும் இரண்டு டிபன் பாக்ஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.