ராஜபாளையத்தில் மாவட்ட டேக்வாண்டோ போட்டி. 250க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. தனியார் டேக்வாண்டோ கிளப் சார்பில் நடைபெற்ற போட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ரா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
போட்டியில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 6, 9 வயதுக்கு உட்பட்ட மினி சப் ஜூனியர், 12, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் மற்றும் 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சீனியர் என 5 வயது பிரிவுகள் மற்றும் 40 கிலோ எடை பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
இருவர் கலந்து கொள்ளும் சண்டை என போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையிலும், தனிநபருக்கான அறிவுத்திறன் போட்டிகளும் நடைபெற்றது. மேலும் போட்டிகளில் ஒவ்வொரு எடை பிரிவிலும் முதல் இடங்களை பிடிக்கும் 160 பேர் தேர்வு செய்யப்பட்டு, வரும் மே மாதம் கோவையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் விருதுநகர் மாவட்டம் சார்பில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தனர்.