விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓட்டுநராக பணிபுரியும் குணசேகர பாண்டியன் (39) நிறுத்திவிட்டு சென்ற 108 ஆம்புலன்ஸை, ஞாயிற்றுக்கிழமை இரவு எம். சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் (26) என்பவர் மதுபோதையில் திருடிச் சென்றார். புகாரளிக்கப்பட்ட நிலையில், ஜி.பி.எஸ் கருவி மூலம் அருப்புக்கோட்டை அருகே கண்டறியப்பட்டு, ஆம்புலன்ஸ் மீட்கப்பட்டது. கனகராஜ் மீது இதற்கு முன்பும் தனியார் பள்ளி பேருந்து, லாரி திருடியதாக புகார்கள் உள்ளன. அவர் திருடிய வாகனங்களை விற்பனை செய்ய முயலாமல், எங்காவது நிறுத்திவிட்டு வந்துவிடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் கனகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.