சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதை நேரில் பார்வையிட்ட சிவகாசி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஜி. அசோகன். விருதுநகர் மாவட்டம், சிவகாசி வழியாக தினந்தோறும் செங்கோட்டை, மதுரை, சென்னை மற்றும் கேரளாவுக்கு செல்லும் ரயில்களின் போக்குவரத்து காரணமாக சிவகாசி-சாட்சியாபுரம் பகுதியில் ரயில்வே கிராசிங் பகுதியில் ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் பொதுமக்களும் வாகனங்களும் சாலை கடப்பதற்கு நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது.
இதன் நிரந்தர தீர்வுக்காக 20 ஆண்டுகளாக மிகுந்த சிரமத்தில் இருந்து வந்தனர். ரூ.61.74 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெறும் இத்திட்டப் பணிகள் பல்வேறு ராட்சச இயந்திரங்களை கொண்டு வேகமாக நடந்து வருகின்றன. இந்த ரயில்வே மேம்பால பணிகள் நிறைவடையும் திட்டம் வருகின்ற டிசம்பர் 2025 வரை உள்ளது. மேம்பால பணிகளை சிவகாசி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் நேரில் சென்று பார்வையிட்டு வேலைகளின் முன்னேற்றம் குறித்து பணியாளர்களிடம் விபரங்களை ஆர்வமுடன் கேட்டறிந்தார்.
இரயில்வே கிராசிங் மேம்பால பணிகள் நிறைவடைந்து வாகனங்கள் செல்லும் வகையில் பயன்பாட்டுக்கு வரும் நாளை பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.