விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுடன் இணைந்த வடபத்ரசாயி பெருமாள் கோவிலில், ஐப்பசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவர் பெரிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாளை கோவில் பட்டர்கள் பல்லக்கை ஊஞ்சல் போல் ஆட்டி, பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். திருகோஷ்டியினர் திருப்பாவை பாடல்களைப் பாட, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.