மதுரையிலிருந்து விருதுநகர் வழியாக சிவகாசி செல்லும் அரசு பேருந்தின் பின்பக்க படிக்கட்டு கதவு பேருந்து சென்று கொண்டிருந்தபோதே திடீரென கழண்டு விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். படிக்கட்டில் பயணிகள் யாரும் பயணிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து பேருந்தை ஓரமாக நிறுத்திய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கழண்டு விழுந்த கதவை பயணிகள் உதவியோடு நார் கயிற்றால் கட்டி வைத்து பின்னர் பேருந்தை இயக்கினர். இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகள் இதேபோல் பயணிகளுக்கு பாதுகாப்பற்று பயனற்ற நிலையில் உள்ளதால் தகுதியான பேருந்துகளை இயக்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.