விருதுநகர் புல்லாக்கோட்டை சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து அதிமுக சார்பில் நகர மாணவரணி செயலாளரும் 6வது வார்டு நகரமன்ற உறுப்பினருமான ராமச்சந்திரன் தலைமையில் தென்மண்டல அளவிலான மாபெரும் கபடி போட்டி இரண்டு நாள்கள் நடைபெற்றது.
இந்த கபடி போட்டியில் மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கேரளா உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 64 அணிகள் பங்கேற்றன. கடந்த இரண்டு நாள்களாக காலையிலிருந்து மாலைவரை நடைபெற்ற கபடி போட்டியில் இறுதிச்சுற்றில் மதுரை கூத்தியார்குண்டு அணியும், விருதுநகர் அணிகளும் மோதின.
இறுதிச்சுற்றில் மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு அணி முதல் பரிசையும், விருதுநகர் அணி இரண்டாம் பரிசையும் பெற்றது. வெற்றிபெற்ற அணிகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பரிசுக்கோப்பைகளையும் அதற்குரிய சான்றிதழ்களையும் வழங்கினார்.